Friday, September 21, 2018

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

22.09.2018

நாட்பட்ட சிறுநீரக நோய்க்கு நிவாரணமளிப்பதற்காக, அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விரிவான வேலைத்திட்டங்கள் காரணமாக, நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் குறிப்பிடத்தக்களவு  குறைவடைந்து வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

800 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 500 நீர் சுத்திகரிப்பு தொகுதிகளிலிருந்து பெறப்பட்ட சுத்தமான குடிநீரை புனித ஜயசிறி மகாபோதிக்கு அபிஷேகம் செய்தல் மற்றும் 500ஆவது நீர் சுத்திகரிப்பு தொகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறுத் தெரிவித்தார்.

இங்குத் தொடர்ந்துரையாற்றிய அவர்,

நாட்டின் அப்பாவி ஏழை மக்களே இந்த நோயினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் எனத் தெரிவித்த ஜனாதிபதி, சிறுநீரக நோய்க்கு நிவாரணமளிக்கவும் அதனைத் தடுப்பதற்கும் அதேபோன்று சிறுநீரக நோயாளர்களினதும் அவர்களது குடும்பங்களினதும் நலன்புரி நடவடிக்கைகளுக்காக கடந்த மூன்றரை வருட காலத்தில் அரசாங்கத்தினால் விரிவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டில் 3,372 சிறுநீரக நோயாளர்கள் புதிதாக கண்டறியப்பட்டதுடன், 2017ஆம் ஆண்டில் 2478 நோயாளர்களும் 2018ஆம் ஆண்டில் இதுவரை 1,500 நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

இதற்கமைய புதிய சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் படிப்படியாக குறைவடைந்து செல்வதாக அவர் சுட்டிக்காட்டினார். 

தான் பொது வேட்பாளராக போட்டியிட்டபோது, தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக கிடைக்கப்பெற்ற நிதியை வைப்பிலிட்டு ஆரம்பிக்கப்பட்ட சிறுநீரக நிதியம் இன்று ஏற்றுக்கொள்ளக்கூடிய வலுவானதொரு தேசிய நிதியமாக காணப்படுகின்றதெனக் குறிப்பிட்ட  அவர், அந்நிதியத்தினூடாக சிறுநீரக நோயாளர்களுக்கான பரந்தளவிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அத்திட்டங்களுடன் இணைந்துகொண்டுள்ள அரச துறையினர், தனியார் துறையினர், வர்த்தக துறையினர் மற்றும் சர்வதேசத்தினருக்கு தனது நன்றியை தெரிவிப்பதாகவும் இதன்போது குறிப்பிட்டார்

0 comments:

Post a Comment