Friday, September 28, 2018

இரத்தினபுரியை உலுக்கிய 12 வயது தமிழ் மாணவரின் தற்கொலை!! (படங்கள்)


28.09.2018

இரத்தினபுரி - இறக்குவானை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் கல்விகற்று வந்த மாணவரொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செயதுக்கொண்டுள்ளார்.

மாணவர் நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டில் இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

12 வயதுடைய மாணவரொருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இந்த தற்கொலைக்கான காரணம் நிதிக்கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையாக இருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும், மத மாற்றம் தொடர்பில் குறித்த சிறுவனுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்துள்ளதாகவும், இந்த பிரச்சனையே மாணவனின் தற்கொலைக்கான காரணம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த மாணவரின் தாய் மாத்தறை - தெனியாய பகுதியில் நபரொருவரை திருமணம் செய்து நான்கு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் , பிறிதொரு மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்ட நபர் தான் பின்பற்றும் மதத்தினை பின்பற்றினால் காணி , வீடு மற்றும் நிரந்தர தொழில் ஆகியவற்றை பெற்றுத்தருவதாக தெரிவித்தார்.

இதற்கு குறித்த தாய் இணக்கம் தெரிவித்ததும் , இறக்குவானை பகுதிக்கு சென்ற இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இரண்டாவது திருமணம் புரிந்தவருக்கும் குறித்த தாய்க்கும் மூன்று பிள்ளைகள் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் , முதல் கணவரின் நான்கு பிள்ளைகளில் மூவர் மதம் மாற்றப்பட்டுள்ளதுடன் 12 வயதுடைய குறித்த சிறுவன் மாத்திரம் மதமாற்றத்திற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

இதனால் குறித்த தாய்க்கு வழங்குவதாக உறுதியளித்த நிலம், வீடு, தொழில் மற்றும் பணம் ஆகியவற்றை குறித்த நபர் கொடுக்க மறுத்துள்ளதாகவும் , 12 வயது சிறுவனுக்கு தொடர்ச்சியாக மதம் மாறுமாறு தொல்லை கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் , சிறுவனின் சடலம் அவரின் சொந்த வசிப்பிடமான தெனியாயவிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் , நல்லடத்திற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், குறித்த மாணவனின் தற்கொலைக்கான சரியான காரணம் தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Hirunews

0 comments:

Post a Comment