July 22.2018
மரண தண்டனை நிறைவேற்றம் என்ற ஜனாதிபதியின் உத்தரவு இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விடயமாக மாறியுள்ள நிலையில், இதற்கான அனைத்து பணிகளும் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி மரணதண்டனையை நிறைவேற்றுவதாயின், அடையாளங் காணப்பட்ட கைதிகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு 3 அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இறுதி அறிக்கையில் ஜனாதிபதி கையொப்பமிட்டதன் பின்னரே மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று அறிக்கைகளும், சட்டமா அதிபர், நீதி அமைச்சர் மற்றும் மரணதண்டனை உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி ஆகியோரின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கைகள் என குறிப்பிடப்படுகின்றது.
நீதியமைச்சரின் அறிக்கை, அமைச்சின் விசேட குழுவினரால் தயாரிக்கப்படும். அதேநேரம், குறித்த குழுவினர் கைதிகளின் கருத்துக்களையும் கேட்டறிதல் அவசியமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இரண்டாவதாக கைதிகளுக்கு மரண தண்டனை உத்தரவை பிறப்பித்த நீதிபதியும் தமது தீர்ப்பு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
மூன்றாவதாக சட்டமா அதிபரின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கைகள்.
இவை அனைத்தும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவ்வாறு சமர்ப்பித்த பின்னர் குறித்த அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இறுதி அறிக்கையில் ஜனாதிபதி கையொப்பமிடுவார்.
அதன் பின்னரே மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.






0 comments:
Post a Comment