Tuesday, August 28, 2018

முன்னாள் போராளிகளுக்காக விஜயகலா வலியுறுத்தியுள்ள விடயம்


28.08.2018

கல்விச் சான்றிதழ்கள் இன்மையால் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கிவரும் முன்னாள் போராளிகளுக்கு விசேட வர்த்தமானி ஊடாக வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது ஒன்றுகூடல், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக, அவரது ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கில் பொருளாதார அபிவிருத்தி மிகவும் முக்கியமானது.

எனினும் இந்தப் பணிகள் மிகவும் தாமதமாகவே இடம்பெறுகின்றன.

எனவே, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமாத்திரமின்றி வடக்கு – கிழக்கில் கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment