Sunday, August 26, 2018

ஞானசார தேரருக்கு அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுதலை? -அடுத்த கபினட்டில் ஆலோசனை

August 26, 2018

நீதிமன்றத்தினால் இரண்டாவது முறையாகவும் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு தற்பொழுது வைத்தியசாலையில் தங்கியிருக்கும் பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரருக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட முடியுமா என எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் கேட்டறியவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரருக்கு எதிராக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்திலிருந்தும் மன்னிப்பு வழங்குவது தொடர்பிலும் கேட்டறியவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஞானசார தேரருக்கு தற்பொழுது வரை இரண்டு வழக்குகளில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முதலாவது வழக்கு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை அச்சுறுத்தியமை தொடர்பிலானது. இது தொடர்பில் தேரருக்கு 06 மாத காலத்துக்கான கடும் வேலையுடன் கூடிய சிறைத் தண்டனை நீதிமன்றத்தினல் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராக தேரர் மேற்முறையீடு செய்தபோது தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாவது வழக்கு ஹோமாகம மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அசாதாரணமான முறையில் செயற்பட்டு நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பானது. இந்த வழக்கில் 06 வருட கட்டாய சிறைத் தண்டனையும் 19 வருட பாரிய வேலையுடன் கூடிய சிறைத் தண்டனையும் நீதிமன்றத்தினால் தேரருக்கு விதிக்கப்பட்டது.
இருப்பினும், இந்த வழக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது முதல் குற்றவாளியான தேரர் சிறைத் தண்டனை அனுபவிக்காது வைத்தியசாலையில் தங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment