Tuesday, October 30, 2018

மஹிந்தவை ஏற்கத் தயாராகும் இந்தியா!


2018-10-31

இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுடன் இராஜதந்திர  தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக இந்தியாவின் NDTV வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் மீள்வருகையை எதிர்பார்க்காத இந்தியா இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களிற்கு பின்னர் மகிந்தவுடன் தொடர்பை ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை காரணமாக மகிந்த ராஜபக்ச மீள அதிகாரத்தை கைப்பற்றியுள்ளமை இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பது குறித்த கவலையை இந்தியாவிற்கு ஏற்படுத்தியுள்ளது. இந்திய இராஜதந்திரிகள் மகிந்த ராஜபக்ச தரப்பினருடன் தொடர்புகொண்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்த ராஜபக்சவின் நியமனம் அரசமைப்பிற்கு உட்பட்டதாகயிருக்கும் பட்சத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மகிந்த ராஜபக்ச தரப்பினருடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் உறவுகளை வலுப்படுத்த முயல்வதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஆர்.எஸ்எ.ஸ் தலைவர் சேசாத்திரி சாரி புதிய தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையும், இந்தியாவும் சிறந்த உறவுகளை ஏற்படுத்த பாடுபடும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மாறியுள்ள பூகோள அரசியல் சூழ்நிலைகளில் நாங்கள் எங்கள் தேசிய நலனை பாதுகாப்பதற்கு யதார்த்தபூர்வமாக இருக்க வேண்டும். வர்த்தகத்தில் ஈடுபடவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

     

0 comments:

Post a Comment