Wednesday, January 9, 2019

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய ஒழுக்க நெறிக் கோவை- பிரதமர்


January 10, 2019

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் மீறிய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முறையான சட்டமொன்றை உருவாக்கப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கரந்தெனிய மகாவித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் பாராளுமன்றத்தில் இடம் பெற்ற மோசமான நிகழ்வுகளை நான் குறிப்பிடத் தேவையில்லை. பாடசாலைகளில் இடம்பெறும் கிரிக்கெட் போட்டிகளின் இறுதியில் மாணவர்கள் நடந்துகொள்ளும் விதமாகவே பாராளுமன்றத்தில் சில எம்.பிக்கள் செயற்பட்டனர். அவ்வாறு செயற்படுவது நாட்டுக்கு முன்மாதிரியாகாது. அதற்காக, நான் வெட்கப்படுகின்றேன்.
எமது பாராளுமன்றத்திற்கு சிறந்த நற்பெயரும் பாராட்டுதல்கள் இருந்தன.எனினும், தற்பொழுது இவ்வாறு நடந்ததெப்படி என்பதை நானே எனக்குள் கேட்டுக்கொள்கின்றேன்.

அதேபோன்று மற்றவர்களிடமும் அது பற்றி கேட்கவிரும்புகின்றேன்.
கடந்த இரு மாத காலமாக இளைஞர் யுவதிகள் இது தொடர்பில் இணையத்தளங்களில் வெளியிட்ட தகவல்களை நோக்கும் போது, எனக்கு வெட்கமாக இருந்தது. இது போன்றவற்றை தடுப்பதற்கு சில நாடுகளில் முறைமையுள்ளது.
இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைமுறையிலுள்ள வேலைத்திட்டங்களை எமது பாராளுமன்றத்திலும் நடைமுறைப் படுத்தி ஒழுக்க கோவை ஒன்றை உருவாக்குவது அவசியமாகும்.

பாராளுமன்றத்தில் ஒழுக்கம் சீர்குலையும் போது அதுதொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டும். சாதாரண மக்களுக்கு முன்மாதிரியாகும் விதத்தில் பாராளுமன்றத்தை உருவாக்குவது முக்கியமாகுமென்றும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.  

0 comments:

Post a Comment