Wednesday, January 9, 2019

வட மாகாண ஆளுநருக்கு அமைச்சர் ஹரீஸ் கடிதம்


January 10, 2019

வட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் என்றவகையில் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வட மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் முதன் முதலாக ஆளுநராக நியமிக்கப்பட்டமையினை இட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இப்பதவிக்காலத்தில் இன, மத, கட்சி பேதமின்றி உங்களுடைய நடவடிக்கைகள் அமையும் என்று நம்புகின்றேன்.

வட மாகாண சபையின் ஆளுநர் என்றவகையில் நீங்களும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் என்றவகையில் நானும் குறிப்பாக வட மாகாண மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும், கடப்பாடும் எம்மிருவருக்கும் இருக்கின்றது.
அதற்கேற்ப எனது அமைச்சின் ஊடாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகளில் பல அபிவிருத்திகளை வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு தயாராகி வருகின்றேன்.
அவ்வபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உங்களுடைய ஒத்துழைப்பை கோருகின்றேன்.

யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பாரி பொறுப்பிள் நீங்கள் இருக்கின்றீர்கள், அத்தோடு போரினால் பாதிப்படைந்து வெளிநாடு உள்ளிட்ட வெளியிடங்களில் குடிபெயர்ந்து வாழ்கின்ற மக்களை மீள் குடியேற்ற வேண்டியுள்ளது.

இவ்வாறான பணிகளை முன்னெடுப்பதற்கு எமது அமைச்சினூடான ஒத்துழைப்புகளை நல்குவதற்கு தயாராகவுள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். மேலும் உங்கள் பணிகள் சிறப்பாக இடம்பெற மீண்டும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் என இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி
-மொஹமட் அப்ராஸ்-

0 comments:

Post a Comment