Friday, June 29, 2018

சிறுத்தை விவகாரம்; பத்து சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு


June 29, 2018 

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றின்மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் பத்து பேரையும் எதிர்வரும் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று நீதிமன்றம் உத்திரவிட்டது.

கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தை வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கி காயப்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் குறித்த சிறுத்தை கிராம மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தது.

இதனை தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

அந்த வகையில் கடந்த 24 ஆம் திகதியும் 25 ஆம் திகதியும் சந்தேகநபர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட, நான்கு பேர் சரணடைந்திருந்தனர்.

அவர்களை இன்றையதினம் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி இன்றையதினம் வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேலும் நான்கு பேர் சரணடைந்திருந்தனர்.

இன்று சரணடைந்தவர்களுடன் சேர்த்து பத்து சந்தேக நபர்களையும் பிணையில் விடுதலை செய்வதற்கு பொலிஸார் ஆட்சேபனை தெரிவித்ததன் விளைவாக, சந்தேகநபர்கள் பத்து பேரையும் எதிர்வரும் 03ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று நீதிமன்றம் உத்திரவிட்டது.

நன்றி

(கிளிநொச்சி நிருபர் நிபோஜன்)

0 comments:

Post a Comment