Tuesday, June 26, 2018

மஹானாம, திஸாநாயக்கவுக்கு வழக்கு முடியும் வரை பிணை கிடையாது

June 27 2018 -

இலஞ்ச குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி ​செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசியர் ஐ.எச்.கே மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க ஆகியோருக்கு எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் நேற்று (26) கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களால் பிணை கோரி தாக்கல் செய்த மனுவை நிராகரித்த நீதவான், அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன், சந்தேகநபர்கள் பெற்றுக்கொண்டுள்ள இலஞ்சத்தின் அளவு மிகப் பாரிய அளவில் காணப்படுவதால், வழக்கு முடியும் வரை அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக, நீதவான் அறிவித்தார்.

குறித்த இருவரும் ரூபா 2 கோடி இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில், கடந்த மே 03 ஆம் திகதி கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களின் குரல் பதிவு மாதிரிகளை பெற வேண்டியுள்ளதால், அவர்கள் இருவரையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 29) வரை அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் சமர்ப்பிக்குமாறு, சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment