Friday, June 29, 2018

தாய் தூக்கிட்ட கயிற்றில் தானும் தற்கொலை செய்து கொண்ட மகன்: நெஞ்சை உருக்கும் சம்பவம்


June 30, 2018
   
தமிழகத்தில் கடனை கேட்டு வங்கி நெருக்கடி கொடுத்ததால் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கயிற்றிலே மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பொன்னியம்மன்மேட்டைச் சேர்ந்த தம்பதி பிருத்விராஜ்-இந்திராணி. இவர்களுக்கு தியாகராஜன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வரும் பிருத்விராஜ் தனியார் வங்கியின் கிரெடிட் கார்ட் மூலம் 2 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் பிருத்விராஜ் காலமாகிவிட்டதால், அவர் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் படி தனியார் வங்கி மகன் தியாகராஜன் மற்றும் மனைவி இந்திராராணிக்கு நெருக்கடி கொடுத்துள்ளது.

தொடர்ந்து சமாளித்து வந்த நிலையில் திடீரென்று இந்திரராணி வீட்டில் தனியாக இருந்த போது, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய தியாகராஜ் அம்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து, அம்மாவை இறக்கி கட்டிலில் வைத்துவிட்டு, அதே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இரண்டு தினங்களாக இருவருமே போன் எடுக்காத காரணத்தினால் சந்தேகமடைந்த பிருத்விராஜின் மகள் வீட்டிற்கு வந்து பார்த்த போது இருவரும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் இரண்டு பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாயும், மகனும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment