Wednesday, June 27, 2018

வடகிழக்கு இணைய தயக்கமின்றி ஆதரவு வழங்குவோம், இணைந்திருப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை


June 28, 2018 

தமிழ்-முஸ்லிம் மக்களிடையே புரிந்துணர்வும் ஒருமைப்பாடும் சகோதரத்துவமும் ஏற்படும்போது வடகிழக்கு இணைப்புக்கு தயக்கமின்றி ஆதரவு வழங்குவோம் என பிரதியமைச்சர் அலிசாகீர் மௌலானா தெரிவித்தார்.

புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் மீதான மக்கள் கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகள்,சிவில் அமைப்புகள்,சமூக செயற்பாட்டாளர்களை அறிவுறுத்தும் நிகழ்வு நேற்று முன் தினம் மட்டக்களப்பில் நடைபெற்றது.

இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு மேலும் உரையாற்றிய அலிசாகீர் மௌலானா,

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13ஆவது சரத்தின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற விடயமே மாகாண சபையாகும்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடக்கும் கிழக்கும் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தது. இந்திய அமைதிப்படையின் கண்காணிப்பில் தான் அன்றைய மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது. வரதராஜப்பெருமாள் அவர்கள் இணைந்த வடகிழக்கிலே முதலமைச்சராக இருந்தார்.

விடுதலைப் புலிகளின் அழுத்தம் காரணமாகவே இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தத்தை கொடுத்தது. ஆனால் விடுதலைப் புலிகள் இந்திய அமைதிப்படையை இலங்கையிலிருந்து துரத்தியடிக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்தார்கள்.

அந்த நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளர் பிரேமதாச அவர்கள் நான் இந்திய அமைதிப்படையை இங்கிருந்து அகற்றுவேன் எனவும் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன் என்றும் சொன்னார். அதன் மூலம் எட்டுகின்ற முடிவைத்தான் அரசியலமைப்பாக கொண்டு வருவேன் என்ற அடிப்படையில் அவர் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருந்தார்.

இவ்வாறு உடன்பாடுகள் வந்து பின் முரண்பாடுகள் வந்து மீண்டும் அதிகாரப் பரவலாக்கலை கொண்டுவந்து அதனை முற்று முழுதாக அமுல்படுத்த முடியாத சிக்கலான சூழ்நிலை உருவாகி கடைசியில் வடகிழக்கில் வரதராஜப்பெருமாள் அவர்கள் ஈழப்பிரகடனம் செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அவ்வாறான சூழ்நிலையில் ஆளுநர் ஆட்சிதான் தொடர்ந்தது.

பிரச்சினைகள் காணப்பட்ட வடகிழக்கில் அதனை தீர்ப்பதற்கு மாகாணசபை முறை கொண்டுவரப்பட்டபோதும் அங்கு ஆளுநர் ஆட்சி தொடர்ந்தது. ஆனால் ஏனைய மாகாணங்களில் முதலமைச்சர்கள் இருந்தனர். அவர்கள் அதனை கேட்கவேயில்லை. அதனை தொடர்ந்து துரதிஷ்டவசமாக 1994ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இந்தியாவின் நிலைப்பாடு முற்றுமுழுதாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக அமைந்தது.

அதன் பின்னர் பிரேமதாசா அவர்கள் கொல்லப்பட்டார். அவர் விடுதலைப் புலிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தடைப்பட்டது. அதன் பின்னர் சந்திரிக்கா அம்மையார் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்போம் என கூறி ஜனாதிபதியாக வந்தார். அவர் மூலமும் எந்தப் பலனும் ஏற்படவில்லை. ஜயசிகுறு ஏற்பட்டது. வடக்கு கிழக்கில் மோதல்கள் நடைபெற்றது.

தீர்வுப்பொதியின் மூலமாக நிறைய விடயங்களை காணலாம் என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவராக இருந்த அஷ்ரப் அவர்கள் முக்கிய பங்கை வகித்தார்.

ஜனாதிபதி, உப ஜனாதிபதியாக ஒரு தமிழர் வரலாம் என்ற அடிப்படையில் கூட அந்தத் தீர்வுகள் வந்தது. பிரதமர், உப பிரதமராக தமிழர் வரலாம் என்ற அடிப்படையில் அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தமாக பேசப்பட்டது.

ஆனால் அந்தத் தீர்வுப்பொதி பாராளுமன்றத்தில்கூட வாக்கெடுப்பிற்கு கொண்டுவரப்படாமல் இன்று அரசியலமைப்பு சபையை உருவாக்க வேண்டுமென சொல்கின்ற ரணில் விக்ரமசிங்க அவர்களே அன்று அதை எதிர்த்திருந்தார். இவ்வாறு எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் எதிர்ப்பதும் ஆட்சிக்கு வந்தபின்னர் அரசியலமைப்பை மாற்றுவதும் மாறிமாறி நடந்த விடயங்களாகும்.

2002ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதமராக இருந்தபோது யுத்த நிறுத்த ஒப்பந்தம் மூலமாக ஒரு பேச்சுவார்த்தை ஏற்பட்டது.

ஆனால் அக்காலப்பகுதியில் துரதிஷ்டவசமாக விடுதலைப் புலிகளுக்குள்ளேயே பிளவு ஏற்பட்டது. அர்த்தமுள்ள தீர்வினை நாங்கள் காண முனைந்தபோதும் அந்த நேரத்தில் அது நடக்கவில்லை. அந்த நேரத்தில் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு ஒரு முக்கியமான ஆலோசகராக நான் இருந்தேன்.

அக்காலப்பகுதியில் மிக உன்னிப்பாக அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கலை உருவாக்க வேண்டுமென்ற விடயங்களில் நாங்கள் ஈடுபட்டோம்.

இன்று சமஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றபோதிலும் அன்று அதனை சாதிக்ககூடிய சூழ்நிலையிருந்தது.ஆனால் விடுதலைப்புலிகள் உட்பட சில தரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளினால் அது இல்லாமல்போனது.

இன்று தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.தமிழ் பேசும் மக்களுக்குள் நல்ல அபிப்பிராயங்கள் ஏற்படுமானால் வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

இங்குள்ள மூவின மக்களையும் இணைத்து சகோதரத்துவத்துடன் வாழமுடியும் என்ற மனநிலையினை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

0 comments:

Post a Comment