, June 19, 2018
இன்றிருக்கும் பிறைக்குழுவின் மீது மக்கள் நம்பிக்கையிழந்து வரும் நிலையில் தீர்வாக பிறைக்குழுவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பரவலாகப் பேசப்படுகின்றன.
இந்நிலையில் அக்குழு எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கான ஓர் ஆலோசனையை இங்கு முன்வைக்க விரும்புகிறேன்.
முதலில் பிறை பற்றிய தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை காணவேண்டும்.
இந்தக் கேள்விக்கு பதில் தேடவேண்டுமானால் நாம் பிறை பற்றிய சில அடிப்படைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். பிறை சம்பந்தமான முடிவு எடுப்பதற்கு இரண்டு விதமான நிபணர்கள் தேவைப்படுகிறார்கள். முதலாவது, நாம் பின்பற்றுவது தேசியப் பிறையா, பிராந்தியப் பிறையா, சர்வதேசப் பிறையா அல்லது பிறையைக் கணிப்பதா என்ற கேள்விக்கு விடை தரவேண்டிய மார்க்க அறிஞர்கள், இக்கேள்விக்கு விடை கண்டு விட்டால் அடுத்த கேள்வி ஒவ்வொரு மாதமும் பிறை பற்றிய முடிவை எடுக்க வேண்டியவர்கள் யார்? என்பது.
அப்பணியைத் தற்பொழுது பிறைக்குழு செய்து வருகிறது. தற்பொழுது உள்ள பிறைக்குழு பொருத்தமானது தானா அல்லது அதில் மாற்றம் நிகழ வேண்டுமா என்பது பற்றியே சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்.
இங்கு நான் தற்போது இருப்பவர்களின் மீதுள்ள நம்பகத்தன்மை பற்றி பேச முனையவில்லை. மாறாக அவர்களின் தகைமை பற்றியே பேச விழைகிறேன்.
பிறை என்பது வானியல் என்ற இயற்கை விஞ்ஞானப் பிரிவைச் சார்ந்த ஒரு விடயம். பிறைக்குழுவின் பொறுப்பு குறித்த தினத்தில் பிறை தென்படுவதற்கு சாத்தியங்கள் உள்ளனவா, பிறை தென்பட்டதை உறுதிப்படுத்தல் போன்றனவே. பிறை தென்பட்டதா இல்லையா என்ற கேள்விக்கு விடை கிடைத்து விட்டால் மாதத்தின் ஆரம்பத்தைத் தீர்மானிப்பது எப்படி என்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் தெரிந்த விடயம். பிறை குறித்த தினத்தில் தெரியுமா இல்லையா? தென்பட்டதாகச் சொல்லப்படுவது நம்பகமானதா இல்லையா? என்ற தீர்மானம் எடுப்பதற்குத் தேவையான அறிவு வானியல் பற்றிய அறிவே.
வானியல் சம்பந்தமாக ஆழ்ந்த அறிவில்லாதவர்களிடம் பிறை பற்றிய தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பைக் கொடுப்பதோ அல்லது அவர்களை இக்குழுவில் உள்ளடக்குவதிலோ எந்த அர்த்தமும் இல்லை.
உண்மையில் வானியலை முறையாகக் கற்காத இஸ்லாமிய அறிஞர்களும் இக்குழுவுக்குப் பொருத்தமற்றவர்கள் தான். காரணம், நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் இது விஞ்ஞானத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கப் படவேண்டிய விடயம்.
இலங்கை ஒரு இஸ்லாமிய நாடாக இருந்திருந்தால் பிறை பற்றிய முடிவை அறிவிக்கும் பொறுப்பு இலங்கை வானிலை ஆய்வு மையத்திற்கே வழங்கப்பட்டிருக்கவேண்டும். அல்லது ஐக்கிய அமெரிக்கா இஸ்லாமிய நாடாக இருந்தால் இப்பொறுப்பு NASA வுக்கு வழங்கப் பட்டிருக்கவேண்டும்.
இலங்கையில் பிறைக்குழு எவ்வாறு அமைய வேண்டும்? சட்ட ஆலோசனைகளுக்கு சட்டத்தரணிகளை நாடுகிறோம், சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வைத்தியர்களிடம் தீர்வு கேட்கிறோம், தொழிநுட்ப ஆலோசனைகளுக்கு பொறியியலாளர்களை நாடுகிறோம். அதே போல் வானவியல் சார்ந்த பிரச்சினைக்கு தீர்வை வானவியல் நிபுணர்களிடமே பெறவேண்டும்.
எமக்கு இலங்கை வானிலை அவதான நிலையத்தில் முழுமையாகத் தங்கியிருக்க முடியாத நிலையில் நாம் எமது சமூகத்திலுள்ள வானியலை முறைப்படி கற்ற துறைசார் நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட வேண்டும், அக்குழுவில் வானியலைப் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கும் விரிவுரையாளர்கள், வானியல் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள், வானியலுடன் சம்பந்தமான உதாரணமாக, வானிலை ஆய்வு மையம் போன்ற நிறுவனங்களில் வேலை செய்யும் நிபுணர்கள் போன்றவர்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். இவர்களின் பொறுப்பு பிறை தென்பட வாய்ப்புகள் உள்ளதா இல்லையா தென்பட்டதாகச் சொல்லப் படும் தகவல் நம்பகமானதா இல்லையா போன்ற தீர்மானங்களை எடுப்பதும் எத்தினத்தில் குறிந்த மாதம் ஆரம்பமாகும் என்ற முடிவை அறிவித்தலுமே.
இம்முடிவை அறிவிப்பதற்கு மார்க்க அறிஞர்கள் போன்ற வேறு துறை சார்ந்தவர்கள் அவசியமில்லை. பிக்ஹு சார்ந்த பிரச்சினைகள் வரும்போது உதாரணமாக, இருபத்து எட்டு நாட்களில் அடுத்த மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டால் என்ன செய்வது போன்ற பிரச்சினைகளுக்கு மார்க்கத் தீர்ப்பை வழங்கும் பொறுப்பு ஜம்இய்யத்துல் உலமாவுக்கு வழங்கலாம். ஆனால் இவ்வாறான பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படுவதில்லை என்ற வகையில் அவர்கள் பிறைக்குழுவில் உள்ளடக்கப்பட வேண்டியதில்லை.
பிறைக்குழுவுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்தல் மற்றும் பிறைக்குழுவின் முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவித்தல் போன்றவற்றை முஸ்லிம் கலாசாரத் திணைக்களம் பொறுப்பேற்பது பொருத்தமாக அமையும். எதிர்வரும் காலங்களில் பிறையைத் தீர்மானிக்கும் அதிகாரம் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் கீழேயே கொண்டுவரப்படும் என அமைச்சர் ஹலீம் குறிப்பிட்டுள்ளமையும் வரவேற்கத்தக்கது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலும் ஜம்மியத்துல் உலமாவும் இல்லாத பிறைக்குழு என்பதை ஜீரணிப்பது பலருக்கு சிரமமாக இருக்கலாம். ஆனால் நிதானமாகவும் ஆழமாகவும் சிந்தித்துப் பார்த்தால் இக்கருத்தின் நியாயம் புரியும்.
-சப்ராஸ் புஹாரி-






0 comments:
Post a Comment