November 24, 2018
இடைக்கால அரசாங்கம் அமைக்க பொதுஜன பெரமுன ஐக்கிய தேசியக் கட்சியை அழைத்துள்ளமையானது, அக்கட்சியின் வங்கரோத்து நிலைமையை எடுத்துக் காட்டுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி இடைக்கால அரசாங்கத்துக்கு நேற்று (23) விடுத்திருந்த அழைப்பு குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்திலுள்ள பெரும்பான்மைக் கட்சியே இடைக்கால அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும். ஐக்கிய தேசிய முன்னணிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது. தமக்கு அரசாங்கம் அமைக்க முடியும். தாம் விரைவில் அரசாங்கத்தை அமைப்போம். அதன்பின்னர், கட்சித் தலைவர்களை ஆலோசித்து தேர்தலுக்கு செல்வது குறித்து தீர்மானிப்போம்.
அரசாங்க தரப்பின் எதிர்பார்ப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. பிரதமரை நியமித்து, அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தைக் கலைத்து, பின்னர் தாம் அரசாங்கம் அமைத்துக் காட்டுவதாகவும், தமக்குப் பெரும்பான்மை உண்டு என்றும் கூறிய ஸ்ரீ ல.பொ.ஜ.பெ. கட்சி இப்போது இடைக்கால அரசாங்கத்துக்கு இறங்கி வந்துள்ளது. இவர்களின் இந்த அழைப்பைக் கேட்கும் போது வெட்கப்படவேண்டியுள்ளது.
இந்த அரசாங்கத்திலுள்ளவர்களின் அதிகார மோகம் காரணமாக முழு நாடும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இதற்கு எதிராக இன்னும் ஓரிரு தினங்களில் பொது மக்கள் வீதிக்கு இறங்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment