29.11.2018
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளது தலைவர்களை நாளையதினம் ஜனாதிபதி பிரத்தியேகமாக சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
சபாநாயகர் கருஜெயசூரியவிற்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றிருந்தது.
நிலவும் நெருக்கடியான அரசியல் சூழ்நிலை தொடர்பில் சபாநாயகர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று இன்று நாடாளுமன்றில் வலியுறுத்தப்பட்டதற்கு இணங்க, இந்த சந்திப்பு இடம்பெற்றதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்போது சபாநாயகர் முன்வைத்தக் யோசனைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் இருந்து சாதகமான பதில் கிடைத்ததாக, சபாநாயகரின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் தாக்கத்தை இனிமேலும் பொதுமக்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதை சபாநாயகர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதுடன், இந்த விடயம் விரைவாக தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில் நாளையதினம் ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கம் வகிக்கின்ற பங்காளிக் கட்சிகளின் தலைவர்களையும், எதிர்கட்சித் தலைவரையும் பிரத்தியேகமாக சந்தித்து இந்த விடயத்திற்கு தீர்வு வழங்க ஜனாதிபதி இணங்கியதாகவும் அவரது ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment