November 25, 2018
ரணில் விக்ரமசிங்கவையோ சரத் பொன்சேகாவையோ மீண்டும் ஒருபோதும் நான் பிரதமராக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் அறிவித்துள்ளார்.
நேற்று (25) வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்குரிய காரணங்களையும் ஜனாதிபதி வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு விரிவாக தெளிவுபடுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஜனாதிபதி வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய பதிலிலிருந்து மீண்டும் ஒரு முறை பிரதமர் நியமனத்துக்கு வாய்ப்பு உருவாகும் என்பது தெளிவாகின்றது.
ஐக்கிய தேசிய முன்னணி பிரதமர் வேட்பாளருக்கு பொருத்தமான நபர் ஒருவரைப் பிரேரிக்க வேண்டும் என்பதை ஜனாதிபதி எதிபார்த்துள்ளார் என்பது அவருடைய கருத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மீண்டும் ஒரு பிரதமரை நியமிக்க வேண்டிய தேவை வராது என்றிருந்திருப்பின் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு வேறுவிதமாக பதிலளித்திருக்க முடியும். புதிதாக பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டிய சந்தர்ப்பம் உருவாகும் என்பதை ஜனாதிபதி எதிர்பார்த்திருக்கின்றார் என்பதையே நேற்றைய கலந்துரையாடலில் வெளியிட்ட கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன.
பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு பெரும்பான்மைப் பலம் இல்லாத நிலையில் நிருவாகத்தைக் கொண்டு செல்ல முடியாதுள்ளது. இப்பொழுதுள்ள அதே எதிர்ப்பு நிலை பாராளுமன்றத்தில் தொடருமாக இருந்தால் புதிய அரசாங்கமொன்றை அமைக்க ஜனாதிபதி நிர்ப்பந்திக்கப்படுவார் என புத்திஜீவிகள் பலரும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகும் வரையில் இந்த அரசியல் இழுபறி நிலை தொடரலாம் என பொதுவான ஒரு கருத்து நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment