27.12.2018
போதையின் பிடியிலிருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்காக போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
காவல்துறை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டதன் பின்னரான கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் பற்றிய தேடுதல் நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் அடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
2018 ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான பத்து மாத காலத்தில் 184.6 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டிருந்தது.
எனினும், காவல்துறை திணைக்களம் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டதற்கமைய, நவம்பர் முதலாம் திகதி முதல் இதுவரையான சுமார் இரண்டு மாத காலத்தில் மாத்திரம் 280 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த இரண்டு மாத காலத்திற்குள் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 15 ஆயிரத்து 530 பேர் கைதுசெய்யப்பட்டு, வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சட்டத்தினை வினைத்திறனாகவும் கடுமையாகவும் நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்குவதற்கு தேவையான சட்ட வரைவும் தற்போது ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய துரிதமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment