Monday, December 24, 2018

ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவரின் நத்தார் வாழ்த்துச் செய்தி…

25 Dec, 2018

சமாதானம் , சகவாழ்வு ஆகிய நற்குணங்களின் மகிமையை போற்றும் இயேசு பிரானின் செய்தியினை மீள் ஒலிக்கச் செய்யும் மகிழ்ச்சிகரமான பொழுதில் நத்தார் பண்டிகை உதயமாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நத்தார் பண்டிகை தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இயேசு பிரானின் பிறப்பினை கொண்டாடும் உலகவாழ் கிறிஸ்தவ மக்கள், புத்தம் புது எதிர்காலத்திற்கான எதிர்பார்ப்புகளுடன், நத்தார் பண்டிகையை கொண்டாடுவதாகவும் ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

உயரிய நோக்கத்தை கொண்ட உன்னதமானவரின் அளவற்ற நற்குணங்களை மீண்டும் மீண்டும் நினைவுகூறும் காலமாக இது அமைந்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் இயேசு கிறிஸ்துவின் கொள்கையை நிலைநாட்ட திடசங்கட்பம் கொள்வது அனைவரினதும் கடமை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அமைதி, கருணை, மனிதநேயம் போன்ற பண்புகளை போதிக்கும் இயேசுபிரானின் போதனைகளும், சகவாழ்வு , தியாகம் பற்றிய அவரின் நற்செய்திகளும் நத்தார் நாளில் நாடெங்கிலும் எதிரொலிக்கட்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வாழ் கிறிஸ்தவர்களுக்கும், உலகவாழ் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் மகிழ்ச்சிகரமான நத்தார் வாழ்த்துக்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன மத பேதமின்றி, அனைத்து இலங்கையர்களும் வேறுபாடின்றி சகோதரத்துவத்துடன் செயற்பட வேண்டிய தருணம் இது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான எதிர்காலத்திற்காக கனவுகளை ஏற்படுத்தும் தருணமாக நத்தார் காலம் காணப்படுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

இயேசு கிறிஸ்துவின் அன்பு மற்றும் சமாதானம் என்பன அனைவருக்கும் கிட்ட வேண்டும் என தாம் பிரார்திப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மிக ஆழமாக சிந்தித்து சரி , பிழை என்பவற்றை பகுந்தறிவதன் முக்கியத்துவத்தையும் , ஏனையவர்களின் குறைபாடுகளை கண்டறிவதற்கு முன்னர் முதலில் தமது குறைகளை கண்டறிவதன் முக்கியத்துவத்தையும் இயேசு கிறிஸ்த்துவின் போதனைகளில் புலப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த போதனைகளை செயற்படுத்துவதற்கு நத்தார் பண்டிகை முக்கிய பங்குவகிப்பதாக மஹிந்த ராஜபக்ஸ தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

0 comments:

Post a Comment