Thursday, December 27, 2018

பொது இடங்களில் தொழுகை நடத்த அதிரடித் தடை

December 27, 2018

உத்தர பிரதேஷ் மாநிலத்தின் நொய்டாவில் பொது இடங்களில் தொழுகை நடத்த அம்மாநில அரசு அதிரடித் தடை விதித்துள்ளது.

டெல்லி அருகே உத்தர பிரதேஷ் மாநிலம், நொய்டாவில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள தொழில் பூங்காக்களில் ஐ.டி. நிறுவனங்கள், கணினி மென்பொருள், இலத்திரனியல், மொபைல் போன் தயாரிப்பு என பல்துறை சார்ந்த நிறுவனங்கள் செயற்படுகின்றன. இவற்றுள் பலவும் பன்னாட்டு நிறுவனங்களாகும்.

வெள்ளிக்கிழமைகளில் நிறுவனங்களின் ஆலைகளில் போதிய இடவசதி இல்லாததால் பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தொழில் பூங்காவில் பொது இடங்களில் தொழுகை நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

அப்பகுதியிலுள்ள தொழில் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் பொது இடங்களில் தொழுகை நடத்த அனுமதிக்கக் கூடாது என பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். பொது இடங்களில் தடையை மீறி தொழுகை நடத்தினால் அதற்கு பணியாற்றும் ஊழியர்களின் நிறுவனமே பொறுப்பு எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கு அகில இந்திய மஜ்லிஸ் இ இத்ஹாதுல் முஸ்லிமன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) கட்சித் தலைவர் அஸாதுதீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘கன்வாரியாஸ் செய்யும் பூஜைக்கு உ.பி. அரசு மலர் தூவி வரவேற்கிறது. ஆனால் வாரத்துக்கு ஒருமுறை தொழுகை நடத்துவதால் சட்டம் ஒழுங்கு, மதநல்லிணக்கம் சீர்குலையுமா? தொழுகை நடத்துவது தனிநபர்கள் தொடர்புடையது. இதற்கு தனியார் நிறுவனங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

0 comments:

Post a Comment