, July 25, 2018 -
மாவை எம்.பி, முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடமும் நேற்று வாக்குமூலம்
விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டுமென உரையாற்றியமை தொடர்பில்முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் நேற்று (24) கொழும்பு விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
யாழில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் சுமார் மூன்று மணி நேரம் விஜயகலாவிடம் விசாரணை நடத்தினர்.
நேற்று மாலை நான்கு மணிமுதல் ஏழு மணிவரை இந்த விசாரணைகள் இடம்பெற்றன.யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் (02) கலந்துகொண்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலாமகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் விடுதலைப்புலிகள் காலத்தில் இடம்பெறவில்லை என்றும், பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாயின் விடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டுமென்ற கருத்துப்படவும் உரையாற்றியிருந்தார்.
இந்த உரைக்கு தென் பகுதியில் பல சர்ச்சைகள், எதிர்ப்புகள் கிளம்பியதால், தனது பதவியை அவர் இராஜினாமா செய்தார். பின்னர் ஐக்கிய தேசிய கட்சியும் விசாரணைக்குழுவை நியமித்து விஜயகலாவை விசாரித்து வருகின்றது. இந்நிலையிலே கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாரும் அவரை விசாரணைக்குட் படுத்தியுளளைனர்.
இதன்பிரகாரம், இந் நிகழ்வில் கலந்துகொண்ட ,வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் உட்பட யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களிடமும் குற்றத்தடுப்பு பொலிஸார் கடந்த வாரம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.இவ்விசாரணையின் இரண்டாம் கட்டமாக நேற்று( 24) விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் ஆகியோரும் நேற்று (24) விசாரணைக்குட் படுத்தப்பட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் ஆகியோரை அவர்களது அலுவலகங்களுக்குச் சென்று , பொலிஸார் விசாரணைகளை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
Thanks
யாழ்ப்பாணம் குறூப் நிருபர்






0 comments:
Post a Comment