Friday, June 22, 2018

முஸ்லிம்களை தாக்கிவிட்டு தமிழ் எம்.பி.யுடன், பள்ளிவாசலுக்கு வந்தவர் கைது

June 22, 2018 

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை அடுத்து சீர்குலைந்துபோயுள்ள இனநல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் பேச்சுவார்த்தை இன்று -22- நடைபெற்றுள்ளது.

இன்றைய ஜூம் ஆ தொழுகையின் பின்னர் இனநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் முஸ்லிம்கள் தரப்பில் இருந்து அமைதிப் பேரணியொன்றும் நடத்தப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலில் பதற்றநிலையைத் தணிக்கும் வகையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.

தமிழ் தரப்பின் முக்கியஸ்தர்களை பள்ளிக்கு வரவழைத்து பதற்றத்தை தணித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் முஸ்லிம்கள் கலந்துரையாடியுள்ளனர்.

இன்றைய சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தமிழ் தரப்பின் சார்பில் கலந்து கொண்டிருந்தார்.

முஸ்லிம்கள் சார்பில் பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். மத்தியஸ்தர்களாக பொலிசாரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தாக்குதல் சம்பவத்தை மறப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் இருதரப்பு நல்லிணக்கம் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் முஸ்லிம்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பிரதேச சபைத் தவிசாளர் பேரின்பராசா விடுதலை செய்யப்பட்டால் மாத்திரமே எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருப்பதாகவும், இல்லையேல் தொடர்ந்தும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கோடீஸ்வரன் எம்.பி. கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

அதற்குப் பதிலளித்த பொலிஸார் அவர் மீது ஆதாரபூர்வமாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் தம்மால் எதுவும் செய்ய முடியாது என்று பதிலளித்துள்ளனர்.

இதற்கிடையே சந்திப்பில் கலந்து கொண்ட கோடீஸ்வரன் எம்.பி.யுடன் கூட வந்த கண்ணப்பன் என்பவரை பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் மீதான தாக்குதலின் ​போது அவர் நேரடியாக தொடர்புபட்டிருந்தமைக்கான ஆதாரங்கள் தம்வசம் இருப்பதாக தெரிவித்தே பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

Jaffna Muslim 

0 comments:

Post a Comment