June 15, 2018
ஏமன் நாட்டின் துறைமுக நகரில் உள்ள ஹொடைடா விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி அரேபியா தலைமையிலான
கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
தற்போது, சவுதி தலைமையிலான படைகள் ஹொடைடா நகரில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் முகாமிட்டு தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
ஹொடைடா நகரில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் செங்கடல் பகுதியில் இந்த படைகளின் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து பீரங்கி மூலமாகவும், போர் விமானங்கள் மூலமாகவும் ஹவுத்தி போராளிகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஈரானில் இருந்து ஆயுதங்களை ஹவுத்திப் போராளிகள் கடல்வழியாக கடத்தி வருவதற்கு ஹொடைடா துறைமுகம் முக்கிய பகுதியாக விளங்குவதால் இதை கைப்பற்றியே தீர வேண்டும் என ஏமன் அரசு கருதுகிறது.
இதற்கிடையில், ஏமன் நாட்டில் இன்று புனித ரமழான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஹொடைடா நகரின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ள சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் நாட்டின் தலைநகர் சனாவை ஹொடைடா துறைமுகத்துடன் இணைக்கும் முக்கிய சாலையை துண்டித்துள்ளன.
மூன்றாண்டு கால உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஹொடைடா விமான நிலையத்துக்கு சில மீட்டர் தூரத்தில் அல் மன்ஸர் பகுதியில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன.
0 comments:
Post a Comment