Saturday, June 23, 2018

தமது வீட்டில் 20 வருடங்கள் பணிபுரிந்த பெண்ணைத் தேடி இலங்கை சென்ற கத்தார் குடும்பம் -

  June 23 2018

கட்டார் வாழ் இரு அரேபிய சகோதரர்கள் ( அக்கா, தம்பி ) தமது வீட்டில் 20 வருடங்கள் பணிபுரிந்த பெண்ணிற்கு கைம்மாறு செய்வதற்காக இலங்கைக்கு பயணம் செய்திருக்கிறார்கள்.

மோனிகா இலங்கை நாட்டுப் பிரஜை. தனது குடும்ப வறுமையை நிவர்த்தி செய்யவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்வதற்காக கட்டாருக்குச் சென்றாள்.

கண்டி கடுகஸ்தோட்டையை வசிப்பிடமாகக்கொண்ட மோனிகா கட்டாரில் வசிக்கும் சவூதி நாட்டுக் குடும்பம் ஓன்றின் வீட்டில் 20 வருடங்களுக்கு மேலாக பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தாள்.
தான் வேலை செய்யும் குடும்ப அங்கத்தவர்களிடம் நம்பிக்கையை பெற்றதன் மூலம் அவரை அவர்கள் வேலைக்காரி என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் அந்தக் குடும்பத்தில் ஓருவராக அவரை கருதினார்கள்.

குழந்தைகள் முதல் வயோதிபர்கள் வரை அனைவருடனும் அவள் பண்பாக, பணிவாக நடந்துகொண்டதன் காரணமாக அவர்களும் மிக்க மரியாதையுடன் அவருக்கு அன்பை வெளிப்படித்தினார்கள்.

மத்திய கிழக்கில் வீட்டுப் பணியாளர்களுக்கு அவர்களது எஜமானர்களால் நடக்கும் கொடுமைகள் பற்றி தினமும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்து சர்வதேச மட்டத்தில் பல விமர்சனங்களை அந்நாட்டவர்கள் சந்தித்தாலும் நல்லுள்ளம் கொண்ட மனிதர்களும் அவர்களில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வயோதிபம், நோயின் காரணமாக வேலை செய்ய முடியாத எத்தனையோ வீட்டுப் பணியாளர்களை தமது நாடுகளுக்கு அனுப்பாமல் அவர்களால் பெறப்படும் சந்தோசம் மற்றும் அனுபவங்களுக்காக மாதாந்த ஊதியங்களை அவர்களுக்குக் கொடுத்து அவர்களை வீடுகளில் தங்கவைத்திருப்பதை மத்திய கிழக்கில் தொழில் புரிபவர்கள் அறிவார்கள்.

அதே போன்று தொழில் புரிந்த வீடுகளில் நன்மதிப்பைப் பெற்று நாட்டில் வசிக்கும் பல தொழிலாளர்களுக்கு மாதாந்தம் பண உதவிகளை அக்குடும்பங்கள் செய்து வருவதும் ஆச்சரியமான விசயமில்லை.

அண்மைக் காலங்களாக பல வருடங்கள் மத்திய கிழக்கில் தொழில் புரிந்து நாடு திரும்பிய வீட்டுப் பணிப்பெண்களுக்கு கைம்மாறு செய்வதற்காக மத்திய கிழக்கைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வரும் செய்திகளை அடிக்கடி அறிய முடிகின்றன.

அதே தொடரில் இரு தினங்களுக்கு முன் கட்டாரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சவூதி நாட்டைச் சேர்ந்த அக்கா, தம்பி இருவர் இலங்கைக்கு வந்திருக்கிறார்கள்.

குழந்தை பருவத்திலிருந்து வாளிப வயது வரை மோனிகா என்ற எமது சகோதர இனப் பெண், தாயைப் போன்று பராமரித்த காரணத்தினால் அவரின் சுகநலம் விசாரிப்பதற்காக சுல்தான் மற்றும் ரஸான் ஸஹ்துத்தீன் என்று அழைக்கப்படும் இரு சகோதர்களும் ஓரு வார காலத்திற்கு இலங்கைக்கு பிரயாணத்தை மேற்கொண்டுள்ளார்கள்.

மோனிகாவின் வீட்டை அடைந்ததும் ரஸான் அவரை ஆனந்தமாக கட்டி அணைத்துக்கொள்கிறாள்.சகோதரர்கள் இருவரும் மோனிகாவுடன் பழைய நினைவுகளை மீட்டிப்பார்க்கிறார்கள்.

வரும் 26ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர்கள் மோனிகாவின் குடும்பத்துடன் நாட்டின் சுற்றுலா தலங்களுக்குச் சென்று இலங்கையின் தனித்துவத்தை அறிந்து வருகிறார்கள்.

நன்றி

21/06/2018
Moulavi Faisan Hamsa ( Qatar )

0 comments:

Post a Comment