Thursday, June 21, 2018

பத்து பேரை தாக்கிய சிறுத்தை பொது மக்களால் அடித்துக் கொலை

June 22, 2018

கிளிநொச்சி அம்பாள்குளம்  கிராமத்தில் நேற்று(21) காலை ஏழு மணி முதல் மதியம் 12.30 மணி வரை வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கி காயத்திற்கு உட்படுத்திய சிறுத்தையொன்று பொது மக்களால்  அடித்துக் கொல்லப்பட்டுள்ளது.

நேற்று (21) காலை 7.00 மணியளவில்  அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்திற்கு பின்புறமாக மக்கள் குடியிருப்பு பகுதியில் ஆட்களற்ற காணிக்குள் புகுந்த சிறுத்தையொன்று மாடு கட்டுவதற்கு சென்ற ஒருவரையும் மற்றொருவரையும் தாக்கியுள்ளது.

இதனையடுத்து, குறித்த சிறுத்தை தொடர்பில் கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு  பொதுமக்களால் அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வனஜீவராசிகள்  திணைக்கள அதிகாரிகள்  வருகை தந்தனர். வெறுங்கையுடன் குறித்த இடத்திற்கு வந்ததாக, பொது மக்களுக்கும் அவர்களுக்குமிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது.

யாழ்ப்பாணத்திலிருந்து வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் வருவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், மதியம் பதினொரு மணியளவில் வனஜீவராசிகள்  திணைக்கள மருத்துவர் உட்பட சில அதிகாரிகள் வருகை தந்தனர்.

இதற்கிடையில் சிறுத்தையின் தாக்குதலுக்கு எட்டு பேர் உள்ளாகியிருந்தனர். இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த சிறுத்தையை சுற்றி வளைத்த போது, திணைக்கள  உத்தியோகத்தர் ஒருவரையும் சிறுத்தை தாக்கியது.

இந்நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் கிராம பொது மக்களுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது.
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உரிய நேரத்திற்கு வந்து பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என பிரதேசவாசிகள் குற்றம் சாட்டினர்.

இதனையடுத்து, தங்களின் நடிவடிக்கைகளுக்கு பொது மக்கள் இடையூறு விளைவிப்பதாக தெரிவித்து, வனஜீவராசிகள் அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.

பின்னர்  கிராம பொது மக்கள் பற்றை ஒன்றுக்குள் பதுங்கியிருந்த சிறுத்தையை சுற்றி வளைத்த நிலையில், பற்றைக்குள் இருந்து பாய்ந்த சிறுத்தை ஒருவரை தாக்கிய நிலையில், ஏனைய பொதுமக்கள் சேர்ந்து அதனை பொல்லுகளால்  தாக்கி கொன்றனர்.

சம்பவ இடத்தில்  கிளிநொச்சி  பொலிஸார், கிராம அலுவலர் உட்பட பலரும் இருந்தனர்.

குறித்த சிறுத்தையின் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த பத்து பேரும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியாலையில் சிகிசை பெற்றுவருகின்றனர்

தினகரன்

Rizwan Segu Mohideen

0 comments:

Post a Comment