Thursday, June 14, 2018

ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை!!


14 JUNE 2018

பொதுபலசேனாவின் பொதுசெயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் ஆறு மாதங்களில் கழிக்கும் வகையில் ஓராண்டுகால கடூழிய சிறை தண்டனை விதித்துள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவிற்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றத்திக்காக, பொதுபல சேனாவின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேருக்கு தண்டனை வழங்கும் வழக்கு விசாரணை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

நீண்ட விசாரணைகளின் பின்னர், இந்த வழக்கில் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக கடந்த மே மாதம் 24ம் திகதி நீதிமன்றால் அறிவிக்கப்பட்டார்.

அத்துடன் அவருக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படும் என்று நீதிமன்றால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், ஹோமாகம நீதவான் நீதிமன்றிற்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

ஊடகவியலாளர் எக்னலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படை புலனாய்வுப் பிரிவைச்சேர்ந்த 9 பேரின் விளக்கமறியலை நீடித்த போது, கலகொட அத்தே ஞானசார தேரர் 2016ம் ஆண்டு நீதிமன்றில் பிரவேசித்து, நீதிமன்றை அவமதிக்கும் வகையில் செயற்பட்டிருந்தார்.

அத்துடன் சந்தியா எக்னலிகொடவையும் நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவர் அச்சுறுத்தி இருந்தார்.

2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றது.

இந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஞானசார தேருக்கு ஆறு மாதங்களில் கழிக்கும் வகையில் ஓராண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், அச்சுறுத்தலுக்கு உள்ளான சந்தியா எக்னலிகொடவிற்கு 50 ஆயிரம் ரூபாய் நட்டஈடு வழங்கவும், 3 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment